🙏 புகழ்ச்சி மாலை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


புகழ்ச்சி மாலை - கலிவெண்பா

1. திருநாமம் போற்றுந் திறமறியேற் கிந்த 
விருநா னிலத்தி னிடையே - யொருநாம

2. மோருருவ மொன்றுமிலா வுன்மேனி காட்டவருஞ் 
சீருடைய செம்பொற் றிருவடியா - யாரமிர்தே

3. தித்திக்குந் தேனே தெளிவிலா நாயேற்கும்
பத்தித் திறமிருக்கும் பண்பளித்தாய் - முத்திக் 

4. குடையானே யென்னையாட் கொண்டானே யெண்டிக் 
குடையானே யென்னையுடை யானே - கடையானேன் 

5. மாளா வகைவந்த வள்ளலே மெய்ப்படவே 
யாளா மடியவர்கட் கன்பனே - சூளா 

6. மணியே மரகதமே மாற்றிலாச் செம்பொ
னணியே யெனக்கணியை யானாய் - திணியவெறும் 

7. பொய்யு மிருளும் பொருந்து மனங்கரையச்
செய்யு மருட்கட் செழுஞ்சுடரே - மெய்யன்பா 

8. லாளான நல்ல வடியார் பிழையென்றுங் 
கேளானே யென்னுடைய கேளானே - மீளார்க்குத் 

9. தோன்றானே தோற்றி யளித்தழிக்குஞ் சோதியுரு 
மூன்றானே யோரிடத்து மூன்றானே -வான்றீகான் 

10. மண்ணலாய் நீரலாய் மாமலர்த்தாள் சூடாதார்க்
கண்ணலாய் நாயேனுக் கண்ணலாய் - பெண்ணலா 

11. யாணலா யன்றி யலியலா யென்றனக்குங் 
காணலாய் வந்த கருணையே நாணிலா

12. தென்னையு மாண்டருளு மெந்தையே யென்மனமாங் 
கன்னையு மாறு கடைக்கணித்தா - யன்னையிலு

13. நல்லானே வேண்டியவா நான்செய்ய முத்திதர
வல்லானே யென்றனக்கு வாய்த்தானே - சொல்லோடு

14. செய்திமன மொவ்வாத தீமையேன் செய்பணியுங் 
கைதவமே யென்றறியக் கல்லானே - மைதீர்ந்த 

15. சோதி யுருவே சுரூபானந் தச்சுடரே 
யாதி யுடனடுவீ றற்றானே - நீதியா
 
16. மேலானே கீழா மடியேற்கு வீடளித்த 
காலானே நாயேன்றன் கைப்பொருளே - நாலான

17. வேதங்க ளேமுதலா மெய்ந்நூல்க ளாலுன்றன் 
பாதங்கள் போற்றறிய பண்புடையாய் - வாதங்கட்

18. கெட்டானே முன்னூல்க ளெண்ணுகின்ற வெட்டுருவத் 
தொட்டானே சிட்டருளத்தமிர்தே - கிட்டானே

19. விண்ணோர்க டங்களுக்கு மேதினிமே னீதீயிலேன் 
கண்ணார வந்தருளுங் கார்முகிலே - பண்ணார்

20. மொழியார் விழிவலையான் மொத்துண்டு நாயே 
னழியாமைக் காத்த வரசே - யொழியாதே

21. யெப்பொருட்கு மெவ்விடத்து மெக்காலத் துங்கலந்த 
செப்பொருளே யெப்பொருட்குஞ் சேயானே யப்பொ

22. கப்பொழுது மாராவமிர்தே யடியடைந்தார்க் 
கெப்பொழுதுந் தித்திக்கு மின்சுவையே - செப்பரிய 

23. பூவோன் முதலாகப் புல்லீறு பல்லுருவாய் 
நீவேறு பட்டாய் நிராமயனே - யாவேறு

24. பால்போ லொருதன்மைப் பட்ட பரம்பொருளே
நூல்போ யுணர்வரிய நுண்ணுணர்வே - வேல்போலுங்

25. கண்ணார்தம் பார்வையாற் கட்டுண்டு கள்ளமுறும் 
பண்ணார் மொழிகள் பலவுங்கேட் - டண்ணாந்து

26. நிற்கு மதியிலியே னேயமிலா னெஞ்சென்னுங் 
கற்கறையச் செய்ததிருக் கண்ணனே - நற்கமலப்

27. பாதந் தொழவறியாப் பாவியேற் குன்னறியும்
போதந் தரவந்த புண்ணியனே - யேதங்

28. கெடுத்தானே கேடிலா நின்பாதங் காட்டி 
யெடுத்தானே யென்னாருயிரே - தடுத்தாண்டு

29. கொண்டானே யேதுங் குணமிலே னென்றறிந்துந்
தொண்டாகக் கொண்ட சுடரொளியே - கண்டா னொன்

30. றில்லாத தீங்கரும்பே யாவர்க்குங் கீழேனுக்
கல்லாதா ளுள்ள வறியானே - பல்லுயிரு

31. மீன்றானே யேழையேன் கண்ணொழிய யாவர்க்குந் 
தோன்றாது நின்ற சுரூபனே - மூன்றாய

32. காலமே காலங் கடந்திடமே யெப்பொருட்கு 
மூலமே யாவு முடிந்திடமே -கோலங்

33. கரியாய் வெளியாய்நீ செய்யாய் கருத 
வரியா யெளியா யனந்த - விரிவே

34. யொடுக்கமே பற்பலவா யோதுகின்ற லோகத் 
தடுக்கமே யவ்வுலகுக் காணி - யடுத்தவடி

35. வாகும் பளிங்கேபோல் யாதினுக்கு மவ்வவையாய்
நீகுன்றி லாத நிறையொளியே - யோகொன்றி

36. லொட்டானே யொன்றறியா வுன்மத்தன் கையிலகப் 
பட்டானே யெட்டாய பல்லுயிரே - யெட்டா

37. வகலமே வண்மையின்யற் றண்மையே யெண்ணுஞ்
சகலமே யொன்றாநீ தானே - பகலிரவொன்

38. றில்லா விரவியே யிவ்வண்ணத் துன்னுருவைச்
சொல்லாதே நான்காணச் சொன்னவனே - யெல்லாமாய் 

39. நின்றானே யொன்றுபலா நின்மலனே துன்மனத்தி 
லொன்றானே நீமுடிவி லொன்றானே - குன்றா

40. வொளியானே யென்னை யுவந்தாண்டு கொள்ள 
வெளியானே சால வெளியாய் - தெளியாதேன்

41. வெற்றவெறும் பொய்யேன் மெய்யடியார் போ லுன்சீர்
கற்றுப் பிதற்றுமது காதலொடுங் - குற்றமெனக்

42. கொள்ளா தெனக்குங் குரைகழறந் தாட்கொண்டு 
விள்ளாதென் னுள்ளிருக்கும் வித்தகனே - யெள்ளா 

43. வறிவே யறிவடங்கு மாலயமாய் நின்ற
செறிவே யெலாங்கடந்த தேசே - பிறிவதறத்

44. தேசாய மேனி தெளிந்தடைந்தோர் சேர்ந்தமைந்த
வாசாம கோசரமே மற்றெவைக்கு - நீசான்றாய்

45. நின்றா யடியேற்கு நீயளித்த கண்ணதனா 
லொன்றாகப் பார்த்தளவி லுன்னையலா - தின்றி 

46. யிருந்த தினியடியே னேதாமென் றென்று 
திருந்து புகழுன்னைச் செய்வேன் - பொருந்தவுனை 

47. யாதி யிமையோர்க ளவ்வுலகின் றிவ்வுலகிற்
போத முனஞ்செய்த புண்ணியத்தா - னாதன்

48.றரணி மிசையதனிற் றாளடைந்தார் சன்ம 
மரண மறவருள வந்து - கரணங்கட் 

49. கெட்டா வொளியை யிதுவென்று கண்காணு 
மட்டாக்கு மென்று வரநினைந்து - கிட்டாராய்

50. நன்மையான் மிக்கவர்க ணின்றுணங்க நாடரிய
தன்மையான் றன்னைத்  தரவென்னக் - கெண்மையாற் 

51. றன்னா லவத்தை பலவாகத் தான்பாவித் 
தென்னா லனைத்து மிலவாக்கித் -  தன்னாகத்

52. தன்னாலே யென்னைத் தனதுருவே தானாக்கி 
யென்னாலே தற்றுதித்த வென்னானை - முன்னான 

53. வென்னரச னென்னப்ப னெம்பெருமா னென்றென்று 
நின்னரிய பொன்னடிக்கே நின்றிறைஞ்சி -யுன்னரிய 

54. வீசனே யெந்தையே யாவர்க்குங் காண்பரிய 
தேசனே யென்றென்று செப்புவார் - நேசமொடுன் 

55. பாதம் பணிவார் பரம்பரனே யென்றிசைப்பார்
வாதங்கட் கெட்டாத வாழ்வென்பார் - போதத்தா 

56. லாய்தற் கரிய வறிவென்பா ரென்னவலங்
காய்தற்குத் தோன்றுங் கனலென்பார் - மாய்தற்கே 

57. வல்லேனை மாளா வகைகாக்க மண்ணில்வரு
நல்லோனே யென்று நலங்கிளப்பார் - பல்லுயிர்க்குங்

58. கோன்றானே யென்பார் குருபரனாய் வீடருளுஞ் 
சான்றோனே யென்று சதுரழிவார் - தோன்று பெருஞ் 

59. சோதியே யென்பார் சுரூபானந் தாவென்பா
ராதியே யென்பா ரகமகிழ்வார் - நீதியழிந் 

60. தார்ப்பா ராற்றுவா ராலிப்பார் கோலத்தைப் 
பார்ப்பார் மலர்ப்பாதம் பற்றுவார் - வேர்ப்பார் 

61. விழுவார் தொழுதெழுவார் விமமுவார் விம்மி 
யழுவா ரதிசயிப்பா ராவார் - வழுவாம

62. லிப்படிநீ யெப்பிறப்பு மாளி லெழில்வீடாஞ் 
செப்பதமுந் தீதென்று செப்புவா - ரெப்பொழுதுந் 

63. போற்றுவார் நல்ல புகழ்மாலை கொண்டடிமே 
லேற்றுவா ரென்செய்வே மென்றுரைப்பா - ராற்றே

64. முடையானே யென்பா ருரைமறப்பார் யார்க்குங் 
கிடையானே யென்று கிளப்பார் - கடையேனைத் 

65. தொண்டாகக் கொண்டருளுந் தூயோனே நாயடியேன் 
கண்டானே யென்று களித்திடுவார் - கொண்டுகொண்

66. டேத்துவார் கும்பிடுவா ரெந்தாய்நின் கோலத்தைப்
பார்த்துவாழ் வார்நின் பழவடியார் - நாத்தழும்பப் 

67. போற்று மவருட் புலையேனை யும்வைத்துச்
சீர்த்த திருமேனித் திறங்காட்டிச் - சாற்றுமறை

68. நாடும் பரம்பொருளாய் நான்றெளிந்து பக்தியுடன் 
பாடும் பரிசு பணித் தருளித் - தேடுகின்ற 

69. விண்ணோர்கள் புண்ணியநீர் மெய்விரும்பா தன்னுடைய 
கண்ணீரா மஞ்சனமே காதலித்துப் - பண்ணாரும் 

70. வேதமுதல் வெவ்வேறு போற்றிசைத்த மெய்ம்மாலை 
பாத மணியாதிப் பாரதனி - லாதமிலி

71. நாயேனை நீயாக்கி நானோதும் பாமாலை
யாயாம லாதரத்தோ டாங்கணிந்து - தேயமெலா

72. மாக்குந் திருப்போ னகமமுது செய்யாதென்
னாக்கு முயிரை யமுதாக்கி - நீக்கின்றி

73. நின்றா யிதுநினையே னெஞ்சுருகே லுள்ளழியே
னுன்றாள் பணியும் வகையுணரே - னொன்றாகப்

74. பாரே னுனையடியேன் பாவியேன் வையமெலா
மாரேனீ யாண்ட வருளுரையே - னூரூர்போய்ச்

75. சாற்றே னகமகிழேன் சம்பிரமத் துன்பாதம்
போற்றேன் புகழ்ந்து புகழ்ந்துரையே - னாற்றேனான்

76. செய்யும் வகையறியேன் றீவினையேன் சேவடி சேர்ந்
துய்யும் வகையருளா யுத்தமனே - பொய்யன்றி

77. மெய்யேநான் செய்கின்ற விண்ணப்பங் கேட்டருளி
யையே யருள வதுவேண்டுந் - துய்யதிருப்

78. பாதந் தொழவென்கை பார்மிசைமேல் வந்தாண்ட
நாதன் றனைத்துதிக்க நாமனமுங் - கேதமறச்

79. சிந்திக்க வின்னருளைச் செய்யதிரு மேனியைக்கண்
பந்திக்க வென்புன் றலைபரனை - வந்திக்க

80. வென்று முரைப்ப ரெழிலடியார் யானதனி
லொன்று முரைக்க வுளத்தெண்ணேன் - பொன்றுங்

81. கடையெலாங் காய்பசியை யஞ்சுதலா னாயேன்
விடயமே மெய்விரும்ப லுற்றேன் - கொடுவினையேன்

82. மாயவிட யத்தே மயங்கா வகையருள
றீய தெனிற்ச்சமிக்கச் செய்தருளல் - காயந்தான்

83. வீய வருளல் விரும்படியார் சிந்தையகத்
தாய பெரும்பத்தி யாங்கருள - னீயருளிச்

84. செய்யா தொழிதியேற் றீவினையேன் போய்நரகுக்
கையா வொருவ னெனவமைவேன் - வையகத்தா

85. ருன்னடியே னேதேனு மானா லுனையிகழ்வா 
ரென்னுடைய தீநெஞ்சை யாரரிவார் - பொன்னடிகள்

86. கூடும் பரிசு குறித்தருளி மற்றவைகொண்
டாடும் பரிசெனக்கு மன்பருளிக் - கோடுமனன்

87. போகுந் திறமருளிப் புண்ணியனே நின்னுருவே 
யாகுந் திறனே யருள்.

// --- முடிவுற்றது --- //